என்னை யாரென்று எண்ணி பார்க்கிறேன்!

Finding Myself, Life and Rejoice in the $$ Land

“நீ ஆத்திகனா, நாத்திகனா?”

Posted by தம்புரா on October 19, 2008

நீ ஆத்திகனா, நாத்திகனா?”

 

கேள்வி எளிதானதாக இருக்கலாம். ஆனால், என்னிடம் அதற்கான பதில் இல்லை, அல்லது எளிதான பதில் இல்லை. எல்லாக் கேள்விகளுக்குமே பதில்கள் இருக்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்பை நான் எதிர்க்கிறேன். ஒன்றற்கொன்று தொடர்புடையனவாய், பலக்கியதாய் இருக்கும் வினை, எதிர்வினைச் செயலாக்கங்களுக்கெல்லாம் ஆதார ஆரம்பப்புள்ளியைத் தேடிச் செல்வது கொஞ்சம் நாட்களுக்குச் சுவாரசியமாய் இருக்கலாம். ஆனால், அது முடிவில்லாத சுழல்பயணமன்றி வேறென்னவாய் இருக்க முடியும்?

 

ஆராய்ச்சியும் வாழ்க்கையின் ஒரு அங்கமெனினும், வெறும் ஆராய்ச்சியில் வாழ்க்கையைத் தொலைப்பதை விட, வாழ்க்கையில் ஆராய்ச்சிக்கான வித்துக்களை விட்டுச் செல்வதை விரும்ப ஆரம்பித்திருக்கிறேன். அதனால், ஒரே சமயத்தில் நான் ஆத்திகனாகவும், நாத்திகனாகவும் இருக்கிறேன். சிலசமயம் நான் என்னவாய் இருக்கிறேன் என்பதை விட, என்னவாய் இல்லை என்பதைச் சொல்ல எளிதாக இருக்கும் என நினைக்கிறேன். அதன் அடிப்படையில் சொன்னால், ஒரே சமயத்தில் நான் ஆத்திகனாகவும் நாத்திகனாகவும் இல்லாதிருக்கிறேன்.

 

நாத்திகம் என்பது

நாத்திகம் அவரவர்கள் மன உணர்ச்சிஆராய்ச்சித் திறன் ஆகியவைகளைக் கொண்டதே தவிர அது ஒரு குணமல்ல; ஒரு கட்சி அல்ல; ஒரு மத மல்ல.

 

நாத்திகன்ஆத்திகன்

காரண காரியத்தைத் தெரிந்து அதன்படி நடப்பவன் நாத்திகன். வெறும் நம்பிக்கையை ஆதாரமாக வைத்துச் சாத்திரம் சொல்லுகிறது, பெரியோர்கள் சொல்லுகிறார்கள் என்பதை நம்பி அந்த நம்பிக்கையின் படி நடப்பவன் ஆத்திகன்.

 

நாத்திகன் என்பதற்குக் கடவுள் இல்லை யென்பவன் என்று பொருளல்ல; புராண இதிகாச வேத சாத்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர்களையே, அவற்றைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்ப்பவர்களையே, பார்ப்பனர்கள் நாத்திகர்கள் என்று எழுதி வைத்திருக்கின்றனர். இராமாயணத்தில் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்த புத்தர் முதலானவர்களை நாத்திகர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பகுத்தறிவுக்கும் நாத்திகத்திற்கும் உள்ள உறவு

சமுதாயச் சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொது உடைமை என்பதைப் போலவே நாத்திகமும் அறிவின் உண்மையான கடைசி எல்லையாகும்.

 

நாத்திகத்தின் பிறப்பிடம்

எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இட மில்லையோ ங்கெல்லாம் இருந்துதான் நாத்திகம் முளைக்கின்றது. கிருத்துவையும், முகமது நபியையும் கூட நாத்திகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கும் அவர்களது சமதர்மமும், சீர்திருத்தமும்தான் காரணமாகும்.

 

இருக்கிற கடவுளை இல்லை என்று சொல்லுவதில் சொல்லுபவனுக்கு என்ன லாபம்? அல்லது சர்வத்தையும் செய்விக்கிற, சொல்லச் செய்கிற ஒரு கடவுள் இப்படியாக ஒருவனைச் சொல்லவும் நினைக்கவும் செய்வதில் கடவுளுக்குத்தானாகட்டும் என்ன லாபம் வரும்? ஆகவே ஒரு மனிதன் இப்படி முட்டாள் தனமான காரியத்தைச் செய்வானா அல்லது ஒரு கடவுள் இப்படிப் பைத்தியக்காரத்தனமான காரியதைதச் செய்விப்பாரா என்பதையாவது, ஒருவன் கடுகளவு நினைத்தாலும், சிந்திக்கும் சக்தி இருந்தாலும் மற்றவனை நாத்திகன், கடவுளை மறுக்கிறவன் என்று குறையோ குற்றமோ சொல்ல மாட்டான்.

 

நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.

 

கருவாச்சியான் எழுதினான் அன்று!…….

“புரட்சிகள் ஏதும் செய்யாமல் உலகிற்கு நன்மை விளையாது

கண்ணகி சிலைதான் இங்குண்டு சீதைக்கு கல்லால் சிலை ஏது?”

 

ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்…

நாத்திகம் பேசும் நல்லோர்க்கெல்லாம் அன்பே சிவமாகும்

பாட்டுக்கு வேண்டுமானால் இது ஒத்து வரும்! நடைமுறைக்கல்ல!…..

 

தமிழ் இலக்கியம் வளர மட்டுமே சாமி உதவினான் ஒழிய, தமிழர்(இந்தியரும் கூட) வளர அல்ல!

முன்னொரு காலத்திலே விண்ணிலே சமர் புரிந்த போரூர்க் கந்தசாமியிடம் தனக்கென்று கேட்க ஒன்றும் தோன்றவில்லை அன்று. விண்ணிலே வென்றவனுக்கு மண்ணிலே எதற்கு மணிமண்டபம் என்னும் கிளைக் கேள்வியை இன்னொரு நாளுக்கென்று வைத்துக் கொள்வோம்.

 

நான் கேட்டுக் கேட்டுத் தான் இந்தச் சாமி எனக்குச் சவுகரியத்தைக் கொடுக்க வேண்டும் என்றால், என்ன பண்ணாட்டுக்கு இவன் என்னை முதலில் படைக்க வேண்டும்? வேறு வேலை இல்லையா இவனுக்கு? சரி, அப்படி முதலிலேயே, படைக்கும்போதே எல்லாவற்றையும் தந்து இவன் என்னை அனுப்பிவிட்டான் என்றால், அப்புறம் இப்போது போய் இவனிடம் என்னத்தையென்று கேட்பது? ஆக, எனக்குக் கேட்க ஒன்றுமில்லாத கந்தசாமியை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? ‘நீயும் நல்லா இருப்பாஎன்று வாழ்த்திவிட்டுச் செல்லத்தான் முடிகிறது, சிலசமயம்.

நான் கேட்பதை அவன் செய்யவேண்டும் என்று விரும்பினால் நான் ஆத்திகனாவேன் என்றால், ஒரு சில விசயங்களுக்காக நான் ஆத்திகனாக இருக்கலாம். அவனை உறுதியாக நம்பி உருகும் உன்னோடு அவன் சந்நிதிக்கு வர எனக்குப் பிடிக்கிறது. நீ கேட்பதை அவன் உனக்குத் தர வேண்டும் என்று உனக்காகச் சில சமயம் அவனைக் கேட்பதில் எனக்கு யாதொரு தயக்கமும் இல்லை. பல்லாண்டுகளாகவும் நான் இதைச் செய்திருக்கிறேன். என் சிபாரிசுக்கு அவனிடத்தே என்ன மதிப்பு இருந்தது என்று எனக்குத் தெரிந்ததில்லை. நீ என்ன கேட்டாய், கேட்பாய், அது கிடைத்ததா என்றும் எனக்குத் தெரியாதே. ஒரு வேளை நீயும் உடன்வரும் எனக்குத் தேவையானவற்றைக் கொடு என்று கேட்டிருந்தாயானால் பாவம், அவனும் ஒரு சுழல்பாதையில் சென்றிருக்கக்கூடும்.

முன்பெல்லாம்எல்லாரும் நல்லா இருக்கணும்பாஎன்றும் கூட இவனிடம் கேட்டிருக்கிறேன். பாவம், எல்லோரையும் பார்த்துக் கொள்கிற பாரம் எளிதானதா என்ன? ‘போய்யா, போஇதென்ன அற்ப சூரன் வதைச் சமரா? இந்தக் கரணம் எல்லாம் நம்மால் ஆகாது ராசா’, என்று மலையேறிப் போய்விட்டான் போலும். நன்றாக வைத்துக் கொள்ள நான் கேட்டுக்கொண்டவர்களில் சிலபேர் சுமாராகத் தான் இருக்கிறார்கள். அவன் கஷ்டம் எனக்குப் புரியத்தான் செய்கிறது.

 

சரி, இதையே உன்னிடம் சொன்னால் அதை நீ எதிர்கொள்ளும் விதம் வேறாய் இருக்கலாம். ஒரு வேளை இன்னும் கொஞ்சம் நம்பிக்கையோடும், இறைஞ்சுதலும் வேண்டுதலுமாய் நான் கேட்டிருக்க வேண்டும் என்று நீ கூறலாம். அது பற்றியும் நான் மறுப்பேதும் சொல்லப் போவதில்லை. உன்னுலகில் அவ்வாறு தான் செயலாற்ற வேண்டும் என்று நீ எண்ணி அமைத்திருக்கலாம். அதைத் தான் நானும் சொல்கிறேன். உன்னுலகை நீயும் என்னுலகை நானும் தான் இயக்கிவர வேண்டும். அவன் உலகை அவனும்.

 

சதா அழிந்தும் ஆகியும் வருகின்ற உலகங்களுக்கு இடையே உன்னுலகும், என்னுலகும், அவன் உலகும் சந்திக்கின்ற ஒரு உன்னத கணப்பொழுதில் எழும் உணர்விற்கும் நிறைவிற்கும் காரணப்பெயர் ஆத்திகமாய் இருந்தால் என்ன? நாத்திகமாய் இருந்தால் என்ன?

 

கடவுளைப் பற்றி ஆத்திகரால் விளக்கிக் கூற முடியவில்லை. கடவுள் என்ற கருத்தை உறுதிபடக் கூறுபவரால் அதனைப் பற்றி எனக்கு விளக்கிக் கூற இயலவில்லை. என் உருவத்தில் நான் இருப்பதைத் தவிர கடவுள் என்ற உருவத்தில் ஒருவர் இருக்கிறார் என்று கூறப்படுமானால் அத்தகைய ஒன்று இருக்க இயலும் என்பதை நான் மறுக்கிறேன்.

பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதும் நாத்திகமேயாகும். ஏனெனில் கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத்திற்காகப் பட்டினி போட்டிருக்கும்போது நாம் அவனுக்குச் சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமே யாகும். அதாவது, கடவுளே நம்பாதகடவுள் செயலை நம்பாத செயலே யாகும்.

 

தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்று காட்டிக் கொள்கிற எவரும், கடவுள் நம்பிக்கையாளர்கள் என்கின்ற எவரும் கடவுளை நம்பி எந்தக் காரியத்தையும் கடவுளிடம் விடுவது கிடையாது. தலைவலி வந்தால்கூட டாக்டரிடம்தான் செல்கிறார்கள். இவர்கள் எப்படி உண்மையான கடவுள் நம்பிக்கைக்காரர்களாக இருக்க முடியும்? எனவே தான் இவர்களைச் சிந்தனையாளராக இல்லாத நாத்திகர்கள் என்கின்றேன்.

 

சொல், … இப்போது சொல். நான் நல்லவனா, கெட்டவனா?

 

ஆனால், எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் இருக்க வேண்டும் என்று நான் இப்போதெல்லாம் எதிர்பார்ப்பதில்லை.

 

இக்கருத்து எவ்வாறு உருவானது என்பதையும் நம்மால் எண்ணிப் பார்க்க இயலவில்லை. ஒன்றுமே இல்லாதது ஏதேனும் ஒன்றாக ஆவதையோ அல்லது ஏதோ ஒன்று ஒன்றுமே இல்லாததாக ஆகிவிடுவதையோ நம்மால் கருதிப் பார்க்க இயலவில்லை.

 

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>